பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்து 9 சவரன் தங்க நகையை திருடி, அதை விற்று கிடைத்த பணத்தில் தனது காதலனுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 16-ஆம் தேதி அவரது வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 9 சவரன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகை காணாமல் போன நாளில் தமிழ்ச்செல்வனின் நண்பரான ராஜேஷின் மகள் ஜாய் பிரியன்சி (19) அந்த வீட்டிற்கு வந்திருந்தது தெரியவந்தது. அவர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம்., சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில், அவர் நகையை திருடியதாகத் தெரியவந்ததாக கூறப்படுகிறது. திருடிய நகையை நகைக்கடையில் விற்று பெற்ற பணத்தில், மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தனது காதலன் ஜெகன் சிவாவுக்கு புதிதாக விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாணவியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜெகன் சிவாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

